Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Saturday, October 2, 2010

காதல் வேதம்

மலையும் நதியும்
நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்
நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு


வானும் மண்ணும்
நீரும் ஒருநாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்
நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும் போது
மீதி வாழுமா
சகியே பிரியாதிரு
பெண்மையே பிரியாதிரு




முள்ளிலே கிடந்தாலும்
ஆணி மேல் நடந்தாலும்-2
கண்மணி மெய் தீண்டினால்
காயங்கள் பூவாகும்
காதலி கண் ஜாடையில்
சிலுவையும் சிறகாகும்
எந்த மாதமும்
பௌர்ணமியே...தேயாதிரு
அங்குலமும் நீங்காதிரு-வானும்

வண்டு வந்து தேனுண்டால்
பூவின் வலி யார் கண்டார்
நேசம் மட்டும் நீ கண்டாய்
நெஞ்சின் வலி யார் கண்டார்
பூக்களில் கண்ணீர் துளி
பொங்குதே யார் தந்தார்
சிந்திய கண்ணீரிலும்
உன் முகம் தானாடுது
காதல் ஒரு போர் போன்றது
என்பதே நான் கண்டது
கண்கள் கேட்குதே
காதலனே... பிரியாதிரு
கண் திரையில் மறையாதிரு-மலையும்





சூரியனும் அணைந்தாலும்
சந்திரனும் அவிந்தாலும்-2
உன் கண்ணில் சந்திரனுண்டு
இரவோடு வலம் வருவேன்
மறு கண்ணில் சூரியனுண்டு
பகலோடு வலம் வருவேன்
உந்தன் கண்களை
காதலியே... மூடாதிரு
கையருகே நீங்காதிரு-மலையும்

Sunday, September 12, 2010

தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம்
கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்


புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பாத்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி

நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட

பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில்
ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?


வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க

கண்ணாமூச்சி ஆடையில
கால்கொலுச நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக

எங்காலுக் கொலுச
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் -நொக்குப்பெத்தேன்
ஏன்டீ நெனவிருக்கா?

பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
 ஈரப்பச்சை கண்டு
என்னமோ ஏதோன்னு

சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான்கத்த
 விறுவிறுன்னு கொண்டாந்து
வீடுசேத்த நெனவிருக்கா?

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்

பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டணா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்
 இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலிகட்டி நீ போக

வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
 ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட

எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு

வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்
 போன வருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு